“இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து குறித்து எனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்தேன் ” என மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின்னர் நடிகர் கமல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ‘இந்தியன் 2’ படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் மரணமடைந்தார்கள். இது தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது சென்னை மாநகர போலீஸ்.
இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் நடிகரான கமல்ஹாசன். இந்த விசாரணைக்குப் பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர், “இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து குறித்து எனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்தேன், இனி இத்தகைய சம்பவங்கள் தொடராமல் தடுக்கும் முறை குறித்து ஆலோசித்தோம். உயிரிழந்த மூவருக்கும் செய்யும் கடமையாக எண்ணி நடந்தவற்றை போலீசாரிடம் கூறினேன்” என தெரிவித்துள்ளார்.